Monday, March 3, 2008

சுடும் குரல்


இலைகளில் வெயில்
எழுதுகிறது ஒளிக்கவிதை.

வெக்கையை சுவாசிக்கும் சுவர்கள்
மனிதர்களில்
உஷ்ணமூச்சை உமிழ்கின்றன.
தண்ணீர் தேடி நெடுநேரமாக
அலைந்துகொண்டிருக்கிறதொரு தெருநாய்.
இக்கொடு மதியத்தில்
எதையோ கூவி விற்றபடி போகும்
முதிய பெண்ணின் குரலில்
செருப்பணியாத பாதங்களின்
சூடு தகிக்கிறது.


இணையத்தில் எழுத-எழுதி இணைகிறோம்


அன்புள்ள நண்பர்களுக்கு,

வாசிப்பதை நேசிக்கும் இரண்டு பேர் இணைந்து இந்த இணையத்தில் எழுத வந்திருக்கிறோம். தமிழ்மணத்திற்குத் தொடுப்புக் கொடுப்பதானால் குறைந்தபட்சம் மூன்று பதிவுகள் இடப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லக் கேள்வி. இந்த எழுத்து நீரோட்டத்தில் வந்து இணைந்துகொள்ளும் நீரோடைகளாக எங்களை ஏற்றுக்கொண்டு வரவேற்பீர்களென நம்புகிறோம். ஏற்கெனவே பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் இணையத்தில் எழுதத் துணிவதே பெரிய விடயந்தான். ஆனால், துணிந்தவர்க்குத் தோல்வியில்லை என்பார்கள். முயற்சித்துப் பார்க்கிறோம். வெல்லவும் தோற்கவும் இது பந்தயமல்ல. இதயங்கள் உணரும் மொழி எழுத்து. உணர்வதை எழுதுகிறோம். நன்றெனில் நயக்கவும் அன்றெனில் விலக்கவும் உங்களுக்கு உரிமையுண்டு.

பிரசன்னா,டெனிசியஸ்