Thursday, April 24, 2008

ஏக்கத்தின் கண்ணீர்


செங்கற்கள் என் தலை அழுத்த
எட்டிப் பார்க்கும் என் கழுத்து வலி,
பகல் உணவை ஞாபகம் செய்யும்
என் வயிற்று வலி,
தீயெனச் சுடும் வெயில்.

கிழிந்த என் மேலாடை வழி தெரியும்
உறுப்புக்களை ரசிக்கும் குரூரக் கண்கள்,
அசதியில் சற்று அசந்து நிற்கிற நேரம்
முறுக்கு மீசையின் வசை மொழிகள்,

மது அருந்த என் கன்னத்தில் அறைந்து
கைக்கூலி பிடுங்கும் தந்தை
எதற்காகவும் அழுததில்லை நான்

கடை வீதியில்…
கிழியா ஆடை அணிந்து
கண்ணுக்கு மையிட்டு
நுனிநாவில் ஆங்கிலம் பேசி
புத்தகப்பையுடன்
எனைக் கடந்து செல்லும் - என்
வயதொத்த பெண்களைப் பார்க்கையில்
வேகமாய் வந்து - என்
பாதங்களை நனைத்து விடுகிறது
என் கண்ணீர்….



க.பிரசன்னா